வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் தான் சமைக்கும் போது பயன்படுத்தப் போவதில்லை என இலங்கையின் பிரபல சமையல்காரரான பப்ளிஸ் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பப்ளிஸ் சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பயன்படுத்தாமல் உள்ளூர் உற்பத்திகளை மட்டுமே பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஒப்புக்கொண்ட சில்வா சமைப்பதில் உள்ளூர் உற்பத்திகளை மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
“நாங்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு முட்டையை கூட பயன்படுத்துவதில்லை. இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நல்லதல்ல என்று என்னால் கூற முடியாது. இருப்பினும் இந்த முட்டைகள் எப்போது இடப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.
இலங்கையில் உள்ளுர் உணவுகளை சமைக்கும் போது உள்ளுர் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரே சமையல்காரர் தான் என நம்புவதாக பப்ளிஸ் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உணவுக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படும் பப்ளிஸ் சில்வா பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சந்தையில் முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இந்தியாவில் இருந்து மில்லியன் கணக்கான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.