பதவிக்கு ஆசைப்பட்டு ஜாதகத்துடன் சாஸ்திரிகளை சந்தித்த போலீஸ் அதிகாரி!

0
301

2022 ஆம் ஆண்டின் இறுதியில் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளதுடன் அரச நிறுவனங்களில் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் 9 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வுபெறும் நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

இதனால் பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் 2 ஆவது உயர் பதவியாக கருதப்படும் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய நந்தன முனசிங்க மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோ ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில், இதனை மையப்படுத்தி கடந்த வாரம், பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விஷேட பிரியாவிடை வைபவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்னும் மூன்று மாதங்களில் தான் ஓய்வுபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு பதவி நீடிப்பு கிடைக்குமா என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தனது ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்துள்ளமை தொடர்பிலும் அவர் இதன்போது சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பதவிக்கு ஆசைப்பட்டு ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி! | A Police Officer Who Wanted Met Horoscopes

பதவி தானாக வர வேண்டும் எனவும் அரசியல், சிபாரிசுகளின் ஊடாக அதனை அடையக் கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, தற்போது வெற்றிடம் உள்ள பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியான பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பாக, சிரேஷ்டத் துவத்தில் முன்னணியில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கபப்டுகின்றது.

அவருக்கு அடுத்த நிலையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் உள்ளனர்.

இந் நிலையில் இம்மூவரில் ஒருவர் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.