நெதர்லாந்துடன் இலங்கை இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்படுமெனவும் அவர் கூறினார்.
இராஜதந்திர உறவுகள்
இலங்கைக்கும் நெதர்லாந்து இராச்சியத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளுக்குமிடையில் பயணிகள் மற்றும் சரக்குகளுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க விமான ஒப்பந்தம் வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த இருதரப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, கல்வி, வர்த்தகம், முதலீடு, விவசாயம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.