பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், 19 வயதான தனது மகள் மீது இரு தடவைகள் காரை ஏற்றி அவரை கொலை செய்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
44 வயதான நைஜல் மால்ட் எனும் நபரே குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் நோர்போல்க் பிராந்தியத்திலுள்ள வீட்டில் வைத்து லொறீன் மால்ட் எனும் 19 வயது யுவதி காரால் மோதி கொல்லப்பட்டார்.
தனது மகள் லொறீன் மால்ட் மீதான ஆத்திரத்தில் அவரை நைஜல் மால்ட் மேர்சிடிஸ் பென்ஸ் காரை ஏற்றி கொலை செய்தார் என முறைப்பாடு செய்யப்பட்டது.
தனது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்திருந்த நைஜல் மால்ட், தனியாக வேறு ஒரு முகவரியில் வசித்து வந்தார் என நோர்விக் கிறவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
சம்பவதினம் லொறீன் மால்ட்டையும் அவரின் காதலனையும் நைஜல் மால்ட் அச்சுறுத்தினார். அதன்பின் தனது காரை பின்புறமாக செலுத்தி, லொறினை மோதி வீழ்த்தினார். பின்னர் லொறீன் மீது காரை செலுத்திச் சென்று நிறுத்தி, முன்னோக்கி சென்றும் அந்த யுவதியின் மீது மீண்டும் காரை ஏற்றினார் என சட்டத்தணி அண்ட்ரூ ஜாக்சன் நீதிமன்றத்தில் கூறினார்.
அதன்பின் அதே காரில் லொறீனின் உடலை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு நைஜல் மால்ட் சென்றார். லொறீன் மால்ட் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது மகளை தான் கொலை செய்யவில்லை என நைஜல் மால்ட் மறுத்தார். அச்சம்பவம் ஒரு விபத்து என அவர் வாதாடினார். எனினும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீகல் மால்ட் தன்னை தாக்கியதாக அவரின் மனைவி 2021 ஏப்ரல் மாதம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நைஜல் மால்ட் தனது மகள் மீது காரை செலுத்தி கொலை செய்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
நைஜல்; மால்ட்டுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.