துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் (Shinzo Abe) உடல் டோக்கியோ வந்தடைந்தது.
நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே (Shinzo Abe) கலந்து கொண்டு பேசிய போது பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் (Shinzo Abe) உடல் டோக்கியோவை வந்தடைந்தது.
டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் (Shinzo Abe) உடலைச் சுமந்து கொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார்.
அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67) (Shinzo Abe). இவர் கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்தவர்.