விவசாய நிலத்தில் வேலை செய்தவர் மின்னல் தாக்கி பலி

0
43

புத்தளம் –  மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (13) மாலை உயிரிழந்தார்.

மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று மாலை உயிரிழந்த நபர், தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், மின்னல் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

அத்துடன், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.