சரணடைந்த போராளிகளின் தகவல்களை வெளியிட இராணுவத்திற்கு கால அவகாசம்: தகவலறியும் உரிமை சட்டம் மூலம் ஊடவியலாளர் கேள்வி

0
55

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு எதிராக எழுத்துமூல ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு இராணுவம் நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக ஊடகவியலாளர் பி.நிரோஷ்குமார், மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியுள்ளது.

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் தகவல்களை இராணுவம் வழங்க மறுத்ததன் காரணமாக ஊடகவியலாளர் பி. நிரோஷ் குமார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்திருந்தார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி, இராணுவத்திடமிருந்து நிரோஷ்குமார் கோரிய தகவல் மறுக்கப்பட்மைக்கு எதிரான மேன்முறையீட்டை தகவல் அறியும் ஆணைக்குழு பரிசீலித்ததன் பின்னர் யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்த இராணுவத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக தகவலறியும் ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளதாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக ஊடகவியலாளர் தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டுமென கோரி அதற்குரிய ஆவணங்களை மன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு தகலவறியும் ஆணைக்குழுவின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் பி. நிரோஷ் குமார் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம், தகவலறியும் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வழக்கில் அந்த ஆணைக்குழுவை ஒரு தரப்பாக சேர்க்கக் கூடாது என நீதிமன்றத்தில் வாதிட்டார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணையில் தகவலறியும் ஆணைக்குழுவையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கமைய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்ததுடன் மனுதாரர் எழுத்து மூல ஆட்சேபனையை அறிவிக்கலாம் என உத்தரவிட்டது. இதற்கமைய இந்த வழக்கு அடுத்த மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.