விதிகளை மீறிய மைத்திரி..! குற்றங்களை சுட்டிக் காட்டும் சட்டத்தரணிகள்

0
56

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், தண்டனை சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்டவற்றின் விதிகளை மைத்திரி மீறியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் மைத்திரி ஏன் இந்த முக்கியமான விடயத்தை மூன்று வாரங்கள் மறைத்துவைத்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினரும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமா அதிபரும் சிஐடியினரும் மைத்திரிபால சிறிசேனவின் கூற்றுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் என சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர்

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் மைத்திரி குற்றம் செய்துள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், விசாரணை செய்யவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி அமில உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை மைத்திரி குற்றமிழைத்துள்ளார். அவரை உடனடியாக கைதுசெய்து தடுத்துவைத்து விசாரணை செய்யலாம் சிஐடியினர் என்ன செய்கின்றனர் என பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.