சந்திரிக்காவுக்கு அரசியல் வெறுத்துவிட்டது: அடுத்து என்ன செய்யப் போகின்றார்?

0
68

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தனக்கு அரசியல் வெறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ள போதும் அவர் கட்சியின் எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

அவ்வாறான பின்புலத்தில் இலங்கை அரசியலின் தற்போதைய நிலை தற்போது தான் வெறுப்பதாக சந்திரிக்கா கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் அரசியல் தொடர்பில் கருத்து வெளியிட எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அண்மைக்கால கிங் மேக்கர்களில் ஒருவரான சந்திரிக்காவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப் போகின்றது என்றே பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளார்கள்.