கனடாவில் ஆரம்பமான தமிழ் மரபுத் திங்கள் 2024 நிகழ்வு: நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வாழ்த்து

0
176

தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதியன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி என்பன கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில், தமிழ் மரபுத் திங்கள் 2024 ஆரம்ப விழாவிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்வும், பெருமிதமும் அடைகின்றேன். ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தியதற்கு கனடாவிற்கு நான் எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக தெரிவு செய்தமை மிகவும் பொருத்தமானதாகும். தமிழ்த் திருநாளான பொங்கல் திருநாள் தை மாதத்தில் நடைபெறுவது தை மாதத்திற்கு தனிச்சிறப்பை சேர்க்கின்றது.

சோழ பேரரசு காலத்திலிருந்தே பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற ஆய்வும், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்ற சிலப்பதிகார வரிகளும், பொங்கலின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

எம் இனம் தொன்மை வாய்ந்த ஓர் இனம். உலகின் செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பூங்குன்றனாரின் வரிகள் உலகளாவிய எமது சகோதரத்துவத்தை, எமது தோழமையை எடுத்துக் காட்டுகின்றது. இவ் தமிழ் மரபு மாதத்தில், எமது கலை, கலாச்சாரத்தை மற்றைய இனத்தவர்களுடன் பகிரும் அதேவேளை உலகில் எங்கு, எச்சமூகத்திற்கு அநீதி நடக்கிறதோ, அதற்காக நாம் குரல் கொடுக்க தயங்க முடியாது.

இவ் அடிப்படையில் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானம் விவாதிக்கப்பட இருக்கின்றது.

இம்மாதத்தில் நாம் எமது கலை, கலாச்சாரத்தை மட்டும் மற்றைய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல் வாழ்வுரிமைக்கான எமது போராட்டத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்திற்கும், ஈடுசெய் நீதிக்கான எமது போராட்டத்திற்கும் அவர்களது ஆதரவை கட்டி எழுப்பும் மாதமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும்.

இன்று புலத்தில் தமிழ் சமுதாயம் ஓர் பலமிக்க சமுதாயமாக பரிணமித்து வருகின்றது. இப் பலத்தினை ஈழத்தமிழருக்கென நாடு அமைப்பதிலும், சமத்துவமான, வளமிக்க உலக சமுதாயத்தை கட்டி எழுப்புவதிலும் நாம் பயன்படுத்துவோம்.

இச்சந்தர்ப்பத்தில், மற்றைய நாடுகளில் வாழும் தமிழ் சகோதரர்கள் அந்நாட்டு அரசாங்கத்தை ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும்படி கோருகின்றேன்.

கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தி அயராது உழைத்து வெற்றி கண்ட தமிழ் மரபுத் திங்கள் செயலவை மேலாளர் நீதன் சண் அவர்களிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.