விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுக்கடுங்காத கூட்டம் காரணமாக பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுவதால் தீவுத் திடலுக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
கடுமையான நெரிசல்
அங்கு கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ, வணிக வளாகங்கள் என முக்கிய பகுதி என்பதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் முழுவதும் அப்பகுதியில் கூட்டத்தைச் சமாளிப்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இப்போதே கடுமையான நெரிசலில் பலர் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்த் உடல் ராஜாஜி அரங்கத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், விஜயகாந்த் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்று அஞ்சலிக்கு வைக்கப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.