மணக்கோலத்தில் நடிகை காஜல் பசுபதி: மறுமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு

0
188

நடிகை காஜல் பசுபதி மறுமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காஜல் பசுபதி முதன்முதலாக கமலின் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘கோ’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் மெளன குரு, கதம் கதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் கிடைக்காத பிரபலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்தது. சின்னத்திரையில் பிரபலமான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த இவர் 70 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்கு பிடித்து இருந்தார். இவரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

2009 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இருவரும் ஒன்றாக இருந்தனர். இதனையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘எனக்கு ஒரு வழியாக மறுமணம் முடிந்து விட்டது.

திடீரென நடந்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை. எல்லாரும் சந்தோஷப்படுவீங்கன்னு நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் மட்டும் தனியாக இருப்பதை போன்று இந்த புகைப்படம் உள்ளது. ரசிகர்கள் பலரும் காஜல் பசுபதியை வாழ்த்தி வருகின்றனர்.