ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பான இறுதி அறிவிப்பு: 22 ஆம் தேதி இறுதி நாள்

0
128

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது.

இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோன்றி பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரம் கற்கத் தகுதிபெற்று அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 100,000 வுக்கு குறைவாக காணப்படுகின்றமை இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின் குறித்த மாணவர்கள் 2023 டிசம்பர் 22ஆம் திகதிக்கு முன் தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதால் எனவே தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்கிறது.