மக்களின் அர்ப்பணிப்பினால் நாடு மீள முடிந்தது: நாட்டை வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்டுள்ளோம் – ஜனாதிபதி

0
151

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் மக்கள் முன்னிலையில் உருவாக்கி கூறும் கதைகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைமைக்கு செல்லும் வழியேற்படும்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக இரண்டாவது தவணை கடனை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக சர்தேச நாணய நிதியம் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சவாலான பயணத்திற்கு தலைமை தாங்க முடிந்தமை குறித்து எனக்குள் பெரும் மகிழ்ச்சி இருக்கின்றது.

தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் வீரர்கள், தலைவர்கள் எவருக்கும் முன்வந்து தலைமையேற்கும் தைரியம் இருக்கவில்லை.என்னிடம் திடசங்கட்பமும் திட்டங்களும் மட்டுமே இருந்தன.

கொடி பாலத்தின் மீதான இந்த பயணம் தொடர்பில் சிலர் கேலியாக பேசினர். எனினும் மக்கள் சிரமத்திற்கு மத்தியிலும் அர்ப்பணிப்புகளை செய்தனர்.

நான் எடுத்த சில கடினமான முடிவுகள் மக்களுக்கு சிரமமானதாக இருந்தாலும் அவர்கள் அவற்றை தாங்கிக்கொண்டனர். அனைவரும் அனுபவித்த கஷ்டங்களின் பிரதிபலனாக நாட்டை வங்குரோத்தில் இருந்து தற்போது மீட்க முடிந்துள்ளது.

அனைவரும் நாடு மேற்கொள்ளும் இந்த பயணத்தின் கௌரவமான பங்காளிகள். பல நாடுகள் வங்குரோத்து அடைந்து அதில் இருந்து மீள எடுத்துக்கொண்ட காலத்தை விட குறைந்த காலத்தில் இலங்கை அதில் இருந்து மீள முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.