தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற திருடன் அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதினால் மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினதன்று யுனான் மாகாணத்தை சேர்ந்த டாங் என்பவரின் வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான்.
இதன்போது வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்து புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில் திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.
முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் பொலிஸார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர்.
திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.