வடக்கில் சீனா ஆதிக்கம் செலுத்த அனுமதியளியோம், இந்தியா எமக்கு முக்கியம்; செல்வம் திட்டவட்டம்

0
160

இலங்கையில் சீனாவின் முதலீடு பொது நல நோக்கோடு இடம்பெறுவதில்லை. சுய இலாபத்தை கருத்திற்கொண்டே சீனா செயற்படுகின்றது. எனவே வடக்கு, கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் தன்னுடைய இலாபத்தை கருதியே சீனா இலங்கையில் பல்வேறு நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தது.

கொழும்பில் உருவாகும் மிகப்பெரிய வர்த்தக நிலையமான போர்ட் சிட்டியையும் தனக்கான ஒரு பிராந்திய இடமாக வைத்துக் கொண்டது.

அதேவேளை துறைமுகத்தின் ஒரு பகுதி அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்ளே உள்ளது.

இலங்கையின் வருமானத்தின் முக்கால்வாசி பங்கு சீனாவிடம் இலங்கை வாங்கிய கடனுக்கான வட்டி கட்டுவதற்கான நிலைமையையே சீனா உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக தற்போது நாம் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள முடியாமல் உள்ளோம். இன்று மீண்டு வடக்கு கிழக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா முயற்சிக்கிறது.

இங்கே தன்னுடைய இலாபம் கருதி என்னென்ன விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது.

சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப் பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றர். அதே நேரம் மீனவர்களுக்கு மீன் வலைகளையும் வழங்குகின்றார்.

மீனவர்களை தன்னகத்தே கொண்டு வந்தால் வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப் பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கும் எங்களுக்கும் மீனவர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவை விட்டு நாங்கள் வேறு நாட்டின் பக்கம் நிற்கின்ற வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது. ஏனென்றால் எங்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியா தான் முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கில் பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.

இந்த விடயத்திலே சீனா தூதுவரின் வருகை வடக்கில் எங்களுடைய மீனவ பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே. அதற்கு அனுமதி வழங்க முடியாது.” என தெரிவித்தார்.