ஹோட்டல் திட்டமாக நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர் நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.
அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட யோசனை
செயலிழந்த மற்றும் பயன்படுத்தப்படாத கட்டிடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சீதா எலியா வழியாக வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடலாம்,” நுவரெலியா தபால் அலுவலகம் நுவரெலியா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும்.
டியூடர் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி சிவப்பு செங்கல் கட்டிடம் நாட்டின் பழமையான தபால் நிலையங்களில் ஒன்றாகும்.