பாதுகாப்புக்காக வங்கி பாதுகாப்பு வைப்பு பெட்டகத்தில் (locker) வைத்திருந்த பணம் கரையான் அரித்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரபிரதேசம் மொராதாபாத்தை சேர்ந்தவர் அல்கா பதக். இந்த பெண்மணி தனது மகளின் திருமணத்திற்காக சிறுகச் சேமித்திருந்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார்.
மகள் திருமணத்துக்காக சேமிப்பு
இதற்காக அவர் வங்கியின் சேமிப்பு கணக்கு அல்லது நீண்ட கால சேமிப்புத் திட்டங்களையோ தேர்ந்தெடுக்காது வங்கி பெட்டகம் வசதியை நாடினார்.
இதன்படி வாங்கி ஒன்றின் பெட்டகத்தில் மகள் திருமணத்துக்கான நகைகள் மற்றும் இந்திய ரூபா மதிப்பில் 18 இலட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.
அண்மையில் வங்கி மேலாளரிடமிருந்து அல்கா பதக்குக்கு அழைப்பு வந்தது. வங்கி பெட்டக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் பணத்தை சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக அல்கா பதக் வங்கி கிளைக்கு அழைக்கப்பட்டார்.
அதன்படி வங்கிக்கு சென்ற அவர் வங்கி மேலாளர் அறிவுறுத்திய நடைமுறைகளை முடித்தார். அதன் பின்னர் தனது பெட்டகத்தின் இருப்புகளை சரிபார்க்க விரும்பினார்.
அப்படி பெட்டகத்தை திறந்து பார்த்த அல்கா பதக் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஏனெனில் மகளின் சேமிப்புக்காக அல்கா பதக் சிறுகச் சேமித்த 18 இலட்சம் ரூபா நாணய தாள்களை கரையான்கள் அரித்திருந்தன.
பெரும் தொகையை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பில்லை என்று வங்கி பெட்டகத்தை நாடினால் அங்கே கரையான்களால் காத்திருந்த ஆபத்தை எதிர்பாராத அந்த பெண்மணி அதிர்ந்து போயிருக்கிறார்.
இந்நிலையில் அல்கா பதக் பத்திரப்படுத்திய பணத்தொகை குறித்தும் அவற்றில் சேதத்தின் விளைவு குறித்தும் பெட்டகத்தின் பாதுகாப்பின்மை குறித்தும் வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.