இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட பல ஒட்டுக் குழுக்கள் காணப்பட்டன. இந்த ஒட்டுக் குழுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை துன்புறுத்தி வந்தனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்போதைய இராஜங்க அமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானால் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.
இளைஞர் யுவதிகள் பிள்ளையானால் கடத்தப்பட்டு தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு மனிதப் புதைகுழிகளாக மறைக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பகிரங்கமாக ஆதாரங்களுடன் அறிவித்தும் இதுவரை குறித்த பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடத்தப்பட்ட ரவீந்திரநாத் என்பவர் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு பின்னர் அந்த இடத்திலிருந்து இன்று வரை வெளியில் கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் தற்போது புலனாய்வு அதிகாரிகளின் நடமாட்டம் குறித்த பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.