இந்தியாவில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேந்திரபரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீவஸ்தவ். இவருக்கும் முனா என்ற இளம்பெண்ணிற்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இவர்களின் காதலை பெண் வீட்டார் எதிர்த்தனர்.
இதையடுத்து ஸ்ரீவஸ்தவ் குடும்பத்தார் ஆதரவுடன் அவருக்கும் முனாவுக்கும் கடந்த 28ஆம் திகதி கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதனால் கோபமடைந்த முனாவின் பெற்றோர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்ததோடு அவரின் புகைப்படத்திற்கு மாலைகள் அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் முனாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து முனா கூறுகையில், என் பெற்றோர் என் நிலையை புரிந்து கொண்டாலும் என்னுடைய மாமாவின் வற்புறுத்தலின் பேரிலேயே எனக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்றார். ஸ்ரீவஸ்தவின் தந்தை கூறுகையில், என் மகனுக்கும், முனாவுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தான் என் மருமகள் முதலை தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் பெற்றோர் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.
முனா 18 வயதை கடந்தவர் என்பதால் சட்டப்படி அவர் திருமணம் செய்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையில் முனாவின் குடும்பத்தார், மனித உரிமைகளை மீறியுள்ளனர் என மனித உரிமை ஆர்வலர் அமர்பரா பிஸ்வால் குற்றஞ்சாட்டியுள்ளார்.