விளையாட்டுத்துறை அமைச்சை பெற்றுக் கொள்வதற்காக ஒருசிலர் விசர்நாய்களைப் போன்று நாவை தொங்கக்போட்டுத் திரிகின்றதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நடவடிக்கை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து விளையாட்டுத்துறைகளிலும் ஊழல் மோசடி
கிரிக்கெட் நிறுவனத்தில் மாத்திரமல்ல அனைத்துவகையான விளையாட்டுத்துறைகளிலும் ஊழல் மோசடி மலிந்து காணப்படுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கிரிக்கெட் நிறுவனம் உட்பட விளையாட்டுத்துறையில் இடம்பெற்றுவரும் ஊழல மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு எதிராக சிலர் செயற்படுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த அரசாங்கத்தில் இருக்கும் சிலர் செயற்படுகின்றனர். அதோடு விளையாட்டுத்துறை அமைச்சை பெற்றுக்கொள்ள விசர்நாய்களைப்போன்று சிலர் நாவை தொங்கவிட்டுக்கொண்டு திரிகின்றனர்.
அதற்கு காரணம் சில விளையாட்டு சங்கங்களில் இருக்கும் பணமாகும். அதேசமயம் விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் அனைத்து விடயங்களிலும் விரல் குத்த எனக்கு விருப்பம் இல்லை.
நான் தவறு செய்வதாக இருந்தால் அதனை யாருக்கு வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும். என்னுடைய சுயாதீனத்தை நான் மதிக்கிறேன். அதேபோன்று விளையாட்டு சங்கங்களினதும் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
கடந்த கால விடயங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றால் பணத்துக்காக கோப்புகளை மறைக்கின்றனர் என தெரிவித்த அமைச்சர் ரொஷான் ரணதுங்க இதனை மாற்றியமைக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்