‘மீண்டும் ஒரு போர் வேண்டாம்’ – மடு அன்னையின் திருவிழாவில் பேராயர் வேண்டுகோள்

0
213

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் திகதி இடம்பெறுகிறது.

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை ஆகியோர் திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டமையானது விசேட அம்சமாகும். மேலும், திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை ஒட்டி மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை பிரசங்கத்தின் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,

இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகளே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருத் தலத்துக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கிறது.

உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது. பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன்.

எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ். மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும் கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும் அமைதியும் சகிப்புத் தன்மையும் நிலை பெறுவதாக.

வெறுப்பும் விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலை அன்று. இது நல்லிணக்கத்திற்கான நேரம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடையங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும் சகோதரத்துவத்தையும் நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும். எந்த ஒரு சமையத் தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகள் போன்றவற்றை பயன்படுத்தி மற்றைய சமையங்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக  திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான  விசுவாசிகள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.