இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தரமற்ற மருந்து பொருட்களை பாவித்து வருவதால் சிகிச்சையில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளில் தரமற்ற மருந்து பொருட்களின் பாவனையால் மர்மமான முறையில் பல மரணங்கள் சம்பவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை பல்வேறு மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு நாணய கையிருப்பு தீர்ந்து வருவதால், அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மருந்து பொருட்களை
உதாரணமாக, புற்றுநோய், சிறுநீரக நோயாளிகளுக்கான சோதனைகளை இடைநிறுத்துவதற்கும், சிக்கலான அறுவை சிகிச்சை உட்பட நடைமுறைகளை ஒத்திவைப்பதற்கும் நிர்பந்திக்கப்படுவதால், அதிகளவில் மரைணங்கள் சம்பவிக்க சாத்தியகூறுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா, ஜப்பான் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்கள் மருந்து பொருட்களை வழங்க உதவுகிறார்கள், ஆனாலும் சில மருந்து பொருட்கள் கைவசம் இல்லை என்றே கூறி வருகின்றனர்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தரமற்ற மருந்து பொருட்கள் நாட்டின் பல உயிர்களை காவுகொண்டு வருவதாகவும் பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக கண்டி – பேராதனை போதனா வைத்தியசாலையில் பல்வேறு மரணங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் மரணங்கள்
அத்துடன், நாட்டின் பல மருத்துவமனைகளில் அதி தீவிர சிசிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான தடுப்பு ஊசி கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றது என கூறப்படுகின்றது.
தரமற்ற மருந்து பாவனை காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக கண்டி-பேராதனை மற்றும் அனுராதபுர வைத்தியசாலையில் நிலவி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கண்டி – பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே, யுவதி உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி பயன்பாடு
அத்துடன், கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்டிபாயாடிக் ஊசிகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
மேலும் பேராதனை வைத்தியசாலையில் யுவதி மரணத்திற்கு காரணமான தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், குறித்த தடுப்பூசி வகையை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
யுவதிக்கு வழங்கப்பட்ட அதே தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 12 நோயாளிகள் அதே வார்டில் நலமுடன் இருப்பதாகவும் தானும் அந்த வைத்தியசாலைக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் கூறிய சுகாதார அமைச்சர், குறித்த யுவதி ஒவ்வாமை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மறந்துவிட்டது
இவ்வாறு பல முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வரும் அரசாங்கம், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து நாட்டு மக்களின் உயிர்களுடன் விளையாடி கொண்டுள்ளதென்றால் என்பதே உண்மை.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் வாய் திறக்காதது ஏன் என்ற கோள்வி எழுந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நாட்டு மக்களை இழந்து வருவதை அரசாங்கம் மறந்து விட்டது.
அந்த வகையில் நோயாளரர்களை விட மருத்துவர்கள் அதிகமாக கவலைப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துளளனர்.
ஏனெனில் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவை என்றும் அவர்கள் உயிரை இழக்க நேரிடும்” என்றும் கூறியுள்ளனர்.
மேலும், சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம். நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு சுகாதார துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர்
அத்துடன் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவுதான் என்ன? பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை கை கழுவி வருகின்றனர் என்று கூறினால் அது மிகையில்லை.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான காலகட்டம் இதுவாகும்.
இவ்வாறு மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டும் என கோரி பல தரப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் தரமற்ற மருந்துகளை பயன்படுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகளால் சம்பவிக்கும் மரணங்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், உயிரிழக்கும் ஒவ்வொருவருக்கும் பதில் கூற வேண்டும்.