கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல்

0
143

கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க, கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப பிணக்கு தொடர்பில் முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்றதாகவும், ஆனால் முறைப்பாடு பதிவதற்காக அலுவலர்கள் இன்றி அதிக நேரமாகியதால், இதுகுறித்து இருமுறை நினைவூட்டியதாகவும் சமித திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொலிஸ் நிலைய உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த பின்னரே சமித திஸாநாயக்கவை முறைப்பாட்டைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் ​​பொலிஸார் தன்னுடன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் வாக்குவாதம் முற்றிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இணைந்து தன்மீது தாக்குதல் தொடுத்ததாகவும் சமித திஸாநாயக்க சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.