ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விமர்சித்துள்ளார்.
நேற்று (19.06.2023) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் வெளிநாடுகளுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு தேவையான உதவிகள்
அதன் மூலம் நாட்டின் கடன் நிலுவைத் தொகைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ பொருளாதார வளர்ச்சிக்கோ எதுவித நன்மையும் கிட்டவில்லை.
நிலையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குப் பதில் தற்காலிக வாக்கு அளிக்கப்பட்ட அரசாங்கமொன்று அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.