சர்ச்சையை ஏற்படுத்திய நொதேன் பவர் அனல் மின் நிலையம் எனக்குத் தெரியாமல் மீண்டும் யாழ்ப்பாணம் வராது என மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு 2வது கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கழிவு ஓயில் பிரச்சனை
கூட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் கழிவு ஓயில் பிரச்சனையை ஏற்படுத்திய நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்படும் என்ற அச்சம் மக்களிடம் காணப்படுவது.
நொதேன் பவர் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட கழிவு ஓயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக 20 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டது.
எனினும் இன்னும் பலர் அந்த நிதியை பெறாது இருக்கிறார்கள் அதற்குக் காரணம் நிதியை பெற்றுக் கொண்டால் குறித்த நிறுவனம் மீளச் செயற்படும் என்ற அச்சமே என சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நொதேண் பவர் நிறுவனம் மீள இயங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டது உண்மை. ஆனால் யாழில் எனக்கு தெரியாமல் நொதேன் பவர் நிறுவனம் மீள செயல்பட முடியாது என்றும் அது தொடர்பில் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.