மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொல்லை; அதிபர் கைது!

0
262

பேருந்தில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதான தமிழ் பாடசாலை ஒன்றின் 51 வயதுடைய அதிபரே புபுரஸ்ஸ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பாடசாலையில் கல்வி பயிலும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் புபுரஸ்ஸ காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முறைப்பாடு

மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொல்லை - பாடசாலை அதிபர் கைது! | Sexual Harassment School Principal Arrested

பாடசாலை நிறைவடைந்த பின் மாணவிகளுடன் ஒன்றாக பேருந்தில் சென்ற குறித்த அதிபர், மாணவிகளின் அருகில் அமர்ந்திருந்திருந்து தனது பையினால் மறைத்துக்கொண்டு அவர்களின் உடலை ஸ்பரிசம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் குறித்த செயலை நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் முறைப்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவங்கள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் வலய கல்வி அலுவலகத்தில் இதற்கு முன்னர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிபரின் மனைவியும் ஆசிரியை எனவும், அவரும் இதே பாடசாலையில் ஒன்றாக பணிபுரிபவர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.