கொழும்பில் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி நடக்கும் மோசடிகள்.. பொலிஸாரால் இருவர் கைது

0
161

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கிளினிக்குகளுக்குச் சென்ற வயோதிப மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களது பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

சந்தேகநபர்கள் இணைந்து திருடிய சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் வெலிகம பிரதேசத்தில் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்திற்கு விற்ற பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணும் பெண்ணும் வைத்தியசாலைக்கு வரும் வயதான மற்றும் நடுத்தர வயது பெண்களுடன் நட்பாக பழகி, மயக்கம் ஏற்படுத்தும் உணவு அல்லது பானம் வழங்கி அவர்களை மயக்கமடைய செய்து தங்க நகைகள் மற்றும் பணப்பையை திருடிச் சென்றது தெரியவந்தது.

சந்தேக நபருடன் இருக்கும் பெண்கள் மயக்க நிலையில் காணப்படும் போது அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் தமக்கு உதவி செய்யும் நபர் போன்று நடித்து தங்க நகை கொள்ளையடிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பெண்களின் தங்க நகைகள், பணம் மற்றும் சொத்துக்கள் திருடப்பட்டமை தொடர்பில் மூன்று முறைப்பாடுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருதானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேகநபர்களின் புகைப்படம் கிடைத்ததை அடுத்து இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் மருதானை பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் பெண்களை இலக்கு வைத்து நடக்கும் மோசடிகள் | Fraud Targeting Women In Colombo

இந்த இருவரும் வெலிகம பிரதேசத்தில் பெண் ஒருவரை மயக்கமடைய செய்து தங்க ஆபரணங்களையும் பணத்தையும் அதே வழியில் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் கணவன் மனைவியல்ல எனவும் பொரளை பிரதேசத்தில் உள்ள தங்கும் அறை ஒன்றில் கணவன் மனைவியாக பொழுதை கழிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 42 வயதுடையவர்களாகும். பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.