இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
சீனாவுக்கு இலங்கை குரங்குகள் கொண்டு செல்லப்படுவது குறித்து அமைச்சர் பிபிசி இடம் கூறுகையில்,
சீனா மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகள்
சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், முதற்கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, விவசாய அமைச்சில் நேற்று முன் தினம் (ஏப்ரல் 11) நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் குரங்குகளின் இனப் பெருக்கம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டில் தற்போது சுமார் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.
200 மில்லியன் தேங்காய்கள் நாசம்
நாட்டில் காணப்படுகின்ற விளை நிலங்களை குரங்குகள் தற்போது அதிகளவில் சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த ஆண்டில் மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் சேதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
அதுதவிர, ஏனைய பயிர் வகைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளமையினால், பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்தே, குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனர்கள் குரங்குகளை இறைச்சிக்காக பயன்படுத்த வாய்ப்புள்ளதா? இலங்கை குரங்குகளை சீனாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்கு பயன்படுத்த போவதாக சிலர் கூறி வருகின்றனர். இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்ற கருத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர முற்றாக நிராகரித்தார்.
சீனாவிலுள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பது முதல், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொள்கின்றது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இறைச்சிக்கா ஆராய்ச்சிக்கா?
அத்துடன் குரங்குகளை பிடித்து அதனை தனிமைப்படுத்தி நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து கூடுகளில் அடைத்து சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறாயினும், இலங்கை குரங்கொன்றிற்காக சுமார் 30,000 முதல் 50,000 இலங்கை ரூபா வரை சீனா செலவிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இலங்கையிலிருந்து கொண்டு செல்லும் குரங்கிற்கு 50,000 ரூபா வரை செலவிடும் சீனா அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துமாயின் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாயாக விற்க வேண்டும்.
அதே சமயம் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இதேவேளை, விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் உள்ளிட்ட 6 வகையான உயிரினங்களை கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.