யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் காணியற்று வாழும் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளது.
பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது
நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரியுள்ளனர். அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்று செயலாளரிடம் மனு கையளித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் அவர்கள் மனு கையளித்தனர்.