நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு உதவிய இலங்கை!

0
221

பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இலங்கையின் உள்நாட்டு தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கம் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை வெளிவிவகார அமைச்சின் அவசர உதவிப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வத்தினால் இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் டெமெற் செகெர்ஸியோக்லுவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்படி துருக்கி மக்களுக்கான இந்த உதவி வழங்கலானது பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதன்போது வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ப்ரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் மேம்பாட்டுப்பிரிவு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.