இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக கடந்த ஆண்டு 35,572 இலங்கை பணியாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், இது இலங்கையிலிருந்து வெளியேறிய மொத்த பயணங்களில் 11.4% ஆகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Masusha) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள அமைச்சர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னன் அல் அவார், அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டு வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
தனிநபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் பல்வேறு மோசடிகளின் விளைவாக விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி வரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரிடம் விளக்கினார்.
விசிட் விசா மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.