கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்; சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos)

0
675

கடல் மார்க்கமாக படகுகள் மூலம் வேறு நாடுகளுக்குள் செல்ல மேற்கொள்ளும் முயற்சி மிகுந்த ஆபத்து நிறைந்ததும் பயங்கரமானதுமாகும்.

எத்தனையோ படகுகள் கடலில் மூழ்கி பலர் இற்றைவரையும் காணாமல் போயுள்ளனர் சிலர் தங்கள் உயிர்களையும் இழந்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் பயணம் செய்பவர்கள் அந்நாட்டில் வசிக்கவோ, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவோ இடமளிக்கப்பட மாட்டார்கள். அத்தோடு இவ்வாறான சட்டவிரோதமான முயற்சியில் வேறு நாடுகளுக்குள் செல்ல முயற்சிப்பவர்கள் சட்டரீதியாக புலம்பெயர்வதற்கான ஏதேனும் வாய்ப்பையும் கூட சுயமாக இழந்து விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு நாட்டினுடைய சட்ட ஏற்பாடுகள் வலுவாக இருக்கும்.

இது தொடர்பில் மக்கள் விழிப்புடனும் முன் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். மோசடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடவோ, அதனால் பாதிக்கப்படவோ கூடாது. 

புதிய இணைப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகளவானவர்கள் வடக்குக் – கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் எனவும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அகப்பட்டு சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு நடுக்கடலில் ஓட்டையானதையடுத்து கடலில் மூழ்க ஆரம்பிக்கவே வியட்நாம் அருகே ஜப்பான் மீட்பு குழுவால் மீட்டு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள்

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அகதிகள் என சந்தேகிக்கப்படும் 300 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியட்நாம் – சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாம் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரியும் உறுதிப்படுத்தினார்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று (திங்கட்கிழமை) வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.

இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, ​​அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு குறித்த கப்பல் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

இது தொடர்பில் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.