தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாக உள்ள யாழ்.செம்மணி படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் தினம் நேற்று தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் செம்மணியில் அனுட்டிக்கப்பட்டது.
நேற்று காலை இடம்பெற்ற நினைவேந்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி
1996ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.
இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தது. அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.