இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்திற்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கடந்த ஜூலை மாதம் 9 -ம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதில் குடிபுகுந்தனர்.
அதற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறிய கோட்டாபய பதவியை துறந்து விட்டு ஜூலை 13 அன்று நாட்டை விட்டே வெளியேறினார்.
முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தாய்லாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
அவரது கட்சி ஆதரவில் ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில், மீண்டும் நாடு திரும்ப கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்திருந்தார்.
அதன்படி நேற்றிரவு கோட்டாபய, தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கி கோட்டாபய, அங்கிருந்து எந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
இந்த நிலையில் கோட்டாபய இலங்கை வந்துள்ளதால் மீண்டும் அவருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கொழும்புவின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.