கொழும்பு ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், கொழும்பு அலரி மாளிகை என்பன போராட்டாகரகளில் கட்டுப்பட்டிற்கு வந்த நிலையில் அங்கிருந்த பல பெறுமதியான பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் சிலர் உடைமைகளை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது கட்டிடங்களில் உள்ள குளியலறைகள், சமையலறைகள் மற்றும் இதர உபகரணங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டதையடுத்து ஏராளமானோர் கண்டுகளித்துள்ளனர்.
அதேவேளை அலரிமாளிகையின் ஊடகப் பிரிவிலுள்ள பொருள்கள் பல திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இதற்கமைய, ஊடகப் பிரிவிலிருந்த மடிக்கணினிகள் இரண்டு, வீடியோ கமெரா ஒன்று உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் அலரி மாளிகைக்குக் செல்லாத நிலையில், அவரது ஊடகப் பிரிவின் ஒரு பகுதி மாத்திரம் அலரிமாளிகைளில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் நுழைந்த பின்னரே குறித்த பொருள்கள் காணாமல் போயிருப்பதாக பிரதமரின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த அலுவலகத்தின் சுவர் துளையிடப்பட்டுள்ளதுடன், கதவு, யன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.