முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கோயில் வழக்கு ஒத்திவைப்பு

0
599

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விஹாரை கட்டுமானப் பணி முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரிடம் விளக்கம் கோரிய வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஜூலை 14 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் ஜூன் 12 ஞாயிறன்று ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும் அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

மூல்லைத்தீவு விகாரை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்! | Mullai Vihara Construction Work Postponed Again

இந் நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் 16.06.2022 அன்றைய தினம் குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம், நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும்,

இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை பொலிஸார் தொடர்ச்சியாக வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

மூல்லைத்தீவு விகாரை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்! | Mullai Vihara Construction Work Postponed Again

அந்தவகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் பொலிசார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான் வழக்குத் தொடுனரான பொலிசார் குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக 23.06.2022 திகதியிட்டிருந்தார்.

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு, மீண்டும் 23.06.2022 அன்று இடம் பெற்றபோது பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும் மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும் காலம் தேவை என கோரியிருந்தனர் இதனடிப்படையில் வழக்கு விசாரணைகள் நேற்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

மூல்லைத்தீவு விகாரை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்! | Mullai Vihara Construction Work Postponed Again

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கெங்காதரன், பரஞ்சோதி, தனஞ்சயன் உள்ளிட்ட பலர் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் சமூகமாகி விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.