சைமண்ட்ஸிற்கு இரங்கல் தெரிவித்த இலங்கை வீரர்கள்!

0
687

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், சமிந்தா வாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஆல்-ரவுண்டர் வீரரான சைமண்ட்ஸ், சனிக்கிழமை இரவு கார் விபத்தில் பலியானது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சைமண்ட்ஸ் இறப்பு செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘காலை எழுந்தவுடனேயே இந்த அதிர்ச்சி செய்தி! ஜாம்பவானின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்! அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

இதே போல் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தனது பதிவில், ‘ஆண்ட்ரு சைமண்ட்ஸ் குறித்த செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என இரங்கல் தெரிவித்துள்ளார்.