நாடு முழுவதும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

0
499

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் வெள்ளப் பெருக்கு காரணமாக இரத்தினபுரி – பாணந்துறை, இரத்தினபுரி – எலபாத்த, கிரியெல்ல – இடங்கொட, கலவானை – மத்துகம, களுத்துறை – அகலவத்தை மற்றும் புளத்சிங்கள – பரகொட ஆகிய வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.