நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்!

0
253

நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தச் சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ய முயன்ற போது, அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கிருந்து விலகி இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் நிலையம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.