மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் மைத்திரி தரப்பினர்!

0
350

சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் கட்சிகளை மறுசீரமைப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜாதிக நிதஹஸ் பெரமுன ஆகிய கட்சிகளின் அங்கத்துவம் இல்லாத கட்சிகளுக்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

பரந்த நோக்கத்துடன் கூடிய பரந்த பயணத்திற்கான முதல் படியாக இந்த சந்திப்பு தயாராகி வருவதாகவும், தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் உட்பட அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒருபோதும் தனி நபர்களாக அரசாங்கத்தை விட்டு வெளியேறாது, அவ்வாறு செய்தால் 14 பேரும் ஒன்றாகச் செல்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கும் போதெல்லாம், நாடு முழுவதிலும் உள்ள கட்சி உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் அரசியல் பீடமும் மத்தியக் குழுவும் கூடி கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.