சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ளமைக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நிதிசேரிப்பு பிரச்சரார நிகழ்வொன்றில் ஜோ பைடன் பங்குபற்றியபோதே மேற்கண்டவாறு சீன ஜனாதிபதியை விமர்சித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில்,
சீனாவின் பலூனை நான் சுட்டு வீழ்த்தியபோது ஸீ ஜின்பிங் ஏன் மிக கவலையடைந்தார் என்றால் பலூனில் உளவு உபகரணங்கள் இருந்தமை அவருக்குத் தெரியாது. சர்வாதிகாரிகளுக்கு அது பெரும் சங்கடமாகும். ஏனெனில் அங்கு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது’ என்றார்.
அன்டனி பிளின்கன் – சீன ஜனாதிபதி சந்திப்பு
அதேவேளை சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புக்கு மறுநாள், சீன ஜனாதிபதியை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீனாவின் பாரிய பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது.
அது உளவு பலூன் என அமெரிக்கா கூறியபோதும் அதனை மறுத்த சீனா, பலூன் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் ஜோ பைடனின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறுகையில்ல், ஜனாதிபதி பைடனின் கருத்து, அபத்தமானதும் பொறுப்பற்றதுமாகும் எனக் கூறியுள்ளார். இது ஒரு பகிரங்க அரசியல் ஆத்திரமூட்டல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.