இலங்கையில் ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கையின் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம். சிறிய பாடசாலை ஒன்றிலாவது இணைத்துகொண்டால் போதும்.
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் அம்மாக்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் பாடசாலையின் அதிபருக்கும் அறிவித்துள்ளார்கள்.
இதனால், பிள்ளையை பாடசாலையை சேர்த்துக்கொள்ள அதிபர் மறுக்கிறார்.” எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் கூறுகிறார்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட தாயை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துச் செல்வதாகவும், ஆனால் கையிலிருக்கும் பதாகையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியாது எனவும் பொலிஸார் கூறுகிறார்கள்.
வந்தால் கையிலிருக்கும் பதாதையுடனேயே வருவேன் தாய் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
தோளில் இருக்கும் பிள்ளையைக் கீழே இறக்குங்கள் என பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கும், “பிள்ளையை வயிற்றில் சுமக்க முடியும் என்றால் தோளில் சுமக்க முடியாதா? என்னைக் கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தால் பிள்ளையுடன் வாகனத்தின் மீது பாய்ந்துவிடுவேன்.” எனவும் அந்தத் தாய் எச்சரிக்கிறார்.
இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலவசக் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் பலர் எழுத்தறிவு மிக்கவர்களாக உள்ளனர்.
இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ஏழை மக்களுக்கு அது முழுமையாக கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறான சூழலில் கொழும்பில் இப்படி ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. நிச்சயம் இது வேதனைக்குறிய விடயமே.
மிக விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஏழை பெண்ணின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.