இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனாக கருதப்படும் தற்போது டுபாயில் மறைந்துள்ளதாக கருதப்படும் தெற்கின் பிரபல பாதாள உலக குழு தலைவன் ‘ஹரக் கட்டா’ என பரவலாக அறியப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன மனைவியுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் டுபாய் பொலிஸாருக்கு சர்வதேச பொலிஸார் ஊடாக அளித்த தகவல் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. ஹரக் கட்டா, அவரது மனைவி மற்றும் மேலும் நெருங்கிய சகாக்கள் சிலர் டுபாயிலிருந்து மலேஷியா செல்ல தயாரான போது கைதாகியுள்ளனர்.
பொலிஸ் தகவல்கள் பிரகாரம் ஹரக் கட்டாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை (சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றினை சிறப்பு பொலிஸ் குழுவொன்று முன்னெடுத்து வந்துள்ளது.
‘ஹரக் கட்டா’ இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அவரது புகைப்படத்தையும் இறந்த ஒருவரின் தரவுகளையும் உள்ளடக்கிய கடவுச் சீட்டினை கண்டுபிடித்தை தொடர்ந்து அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பலனாகவே, அவரைக் கைது செய்ய முடிந்ததாக கூறப்படுகின்றது. எனினும் கைது செய்யப்பட்டவர் ஹரக் கட்டா என்பதை உறுதி செய்து டுபாய் நேற்று நண்பகல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிப்புக்களை இலங்கைக்கு வழங்காத நிலையில் அவ் அறிவிப்பு கிடைத்ததும் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் 20 இற்கும் மேற்பட்ட கொலைகள் என பல குற்றச்சாட்டுக்கள் ஹரக் கட்டா மீது உள்ளன. அதுமட்டுமல்லாது கடந்த வாரம் கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்குள் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியிலும் ஹரக் கட்டா இருக்கின்றமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.