திருகோணமலை அன்புவழிபுரத்தில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை எரிபொருட்களை வீடுகளில் சேமித்து வைக்க வேண்டாமென பொலிசார் உட்பட பலர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அண்மையில் கொழும்பு, கஹதொட்டுவ பகுதியில் இதே போன்று பெற்றோல் சேமித்து வைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பமே வீட்டோடு தீ பற்றி எரிந்ததில் கணவன், மனைவி அந்த இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
அத்துடன் , இன்று காலை அவர்களது ஒன்பது வயது மகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.