இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Umar Farooq Burki ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல (17-06-2022) கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக தெரிவு செய்யப்பட்ட மருந்துகளை வழங்கியமைக்காகவும், இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்கியமைக்காகவும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.