நாட்டை காப்பாற்ற நாங்கள் இருக்கின்றோம்; இராணுவத் தளபதி

0
547

நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்து இலங்கை இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றுவார்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களை அனுப்பிவைக்க விமான நிலையம் சென்ற இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

“நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு அவசியமான பாதுகாப்பை வழங்கும் இலங்கை இராணுவம் நாட்டிற்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

மாலியில் உள்ள எமது படையினர், களநிலவரத்தை பொருட்படுத்தாமல் கடினமான பணியைச் செய்கிறார்கள். எங்கள் படையினரின் தொழில்முறை தரம் மற்றும் அவர்களின் சிறந்த பணிகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் பிராந்திய தளபதிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் நாங்கள் விலக மாட்டோம் எனவும் இராணுவத்தளபதி கூறினார்.

அதேவேளை மே 9 ஆம் திகதி 24 மணி நேரத்துக்குள் வெடித்த அமைதியின் மையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவித்த அவர், அதற்காக பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என்றும் இவ்வாறான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.