முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

0
354

முல்லைத்தீவு – நட்டாங்கண்டல், பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

பாண்டியன்குளம் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு உழவு இயந்திரங்களையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாகன சாரதி இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாண்டியன்குளம் பொலிஸார் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு மணல் வளங்கள் அகழப்பட்டு ஏற்றப்படுகின்றன என கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.