நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 03 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெருவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தொம்பே, புதுபாகல – வானலுவாவ வீதியில் உக்கொடுன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதியதில் செலுத்துனர் வீதியில் வீழ்ந்ததில் எதிர்திசையில் வந்த லொறி அவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பண்டுலகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் மரணித்தார்.
பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.