சாய்ந்தமருதில் ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம் : புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

0
29

சாய்ந்தமருது  பகுதியில் ஒடுக்கமான பாலமொன்று புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.    

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது  பகுதியில்  அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக  ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் தொழில் நிமித்தமான செல்வோர் அச்சத்துடன்  பயணம் செய்கின்றனர்.  

அத்துடன் இரவு வேளையில் எவ்வித மின் ஒளியும் இன்றி இருளில் முழ்கி காணப்படுவதனால் மாற்று பாதைகளை பாதசாரிகள் பயன்படுத்துவதை காண முடிகின்றது.

இது தவிர உடைந்து விழும் நிலையில்  இந்த ஒடுக்கமான பாலம் காணப்படுவதாகவும் உடனடியாக மீள உடைத்து புனர்நிர்மாணம் செய்ய  வேண்டும் என சாய்ந்தமருது  மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பாலம் குறித்து  மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள்  இந்த பிரச்சினைக்கு தீர்வை தருவதாக கடந்த கால  தேர்தல்  மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் அவை எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்ற நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய  தீர்வை வழங்க முன்வர வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.